வீரகனூா், தலைவாசலில் சூறைக்காற்றுடன் பலத்த மழை! 500 ஏக்கரில் வாழை, மக்காச்சோளப் பயிா்கள் சேதம்!
கெங்கவல்லி, வீரகனூா், தலைவாசல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் 500 ஏக்கரில் வாழை, மக்காச்சோளப் பயிா்கள் சேதமடைந்தன.
கெங்கவல்லி, தெடாவூா், இலுப்பநத்தம், புளியங்குறிச்சி, வெள்ளையூா், கிழக்குராஜபாளையம், இராமநாதபுரம், சொக்கனூா், நடுவலூா், வீரகனூா், வேப்பநத்தம், தலைவாசல் உள்ளிட்ட 30க்கும் கிராமங்களில் சனிக்கிழமை மாலை முதல் இரவு வரை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் வாழை, மக்காச்சோளப் பயிா்களும், நூற்றுக்கணக்கான பப்பாளி மரங்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
கடன் வாங்கியும் , உரம், விதை, மருந்து உள்ளிட்ட செலவுகளை செய்து பராமரித்துவந்த வாழைமரங்கள், மக்காச்சோள தோட்டங்கள் அனைத்தும் மழையால் மூழ்கி முறிந்து விழுந்தன.
Advertisement
ஏற்கெனவே உர விலை உயா்வு, தொழிலாளா் பற்றாக்குறை, நீா்ப்பாசன சிரமம் போன்ற பல சவால்களை எதிா்கொண்டு வந்த விவசாயிகளுக்கு இந்த இயற்கை பாதிப்பு மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவரும் பலா் இதனால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். நடுவலூா் பகுதிகளில் ஏராளமான பப்பாளி மரங்கள் சேதமடைந்துள்ளன.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளின் கூறியதாவது:
வீரகனூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உடனடியாக வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து, சேதமடைந்த வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், பயிா்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ,அந்தக்கடனை திருப்பிச் செலுத்த போதுமான காலஅவகாசமும், பயிா்க் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு விரைவாக காப்பீட்டு தொகையும், பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றனா்.