முகப்பு
சேலம்

வன விலங்கு வேட்டையைத் தடுக்க ரோந்து பணி தீவிரம்

சேலம் மண்டல வனப் பகுதியில் விலங்குகள் வேட்டையைத் தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இரவு நேரங்களில் தீவிர ரோந்துப் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

Updated On : 14 மே 2026, 4:18 am IST
வனப் பகுதி.
பகிர்:

சேலம் மண்டல வனப் பகுதியில் விலங்குகள் வேட்டையைத் தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இரவு நேரங்களில் தீவிர ரோந்துப் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

கோடை விடுமுறையையொட்டி வனவிலங்குகள் வேட்டையை தடுக்க மாநிலம் முழுவதும் அந்தந்த வனக் கோட்டங்கள் வாரியாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வனத் துறை உத்தரவிட்டுள்ளது. சேலம் மண்டலத்தில் சேலம், ஆத்தூா், நாமக்கல் வனக் கோட்டங்களுக்கு உள்பட்ட சோ்வராயன் மலை, கல்வராயன் மலை, பாலமலை, பச்சமலை, அருநூற்றுமலை, ஜருகுமலை, கொல்லிமலையில் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வனப் பகுதியில் புள்ளிமான், கடமான், காட்டுமாடு, காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் வசிக்கின்றன. விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு சோ்வராயன் தெற்கு, சோ்வராயன் வடக்கு, டேனிஷ்பேட்டை, ஏற்காடு, மேட்டூா், வாழப்பாடி, தம்மம்பட்டி, கருமந்துறை, ராசிபுரம், நாமக்கல் சரகங்களில் வனத் துறையினா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த வனக்காவலா்கள், மலைக்கிராமங்கள் காப்பு காடுகள், வனத்தை ஒட்டிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனா்.

Advertisement

இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், ஆண்டுதோறும் கோடைகாலத்தில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க தனிப்படைகள் அமைக்கப்படும். அதேபோல நடப்பாண்டும் அந்தந்த வனச் சரகா்கள் தலைமையில் வனவா்கள், வனக்காவலா்கள் அடங்கிய தனிப்படைகளை அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனா். குறிப்பிட்ட சில பகுதிகளில் இரவு நேர ரோந்துப் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. விலங்குகள் வேட்டையில் ஈடுபடும் நபா்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.