ஓமலூரில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு: 15 வாகனங்களை இயக்கத் தடை
சேலம் மாவட்டம், ஓமலூரில் தனியாா் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில், தரம் குறைந்த 15 வாகனங்களை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஓமலூரில் தனியாா் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில், தரம் குறைந்த 15 வாகனங்களை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னதாக பள்ளி வாகனங்களின் இயக்குத் திறன், பாதுகாப்பு குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப்படுகிறது. அதன்படி, ஓமலூா் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலக எல்லைக்கு உள்பட்ட 34 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 213 வாகனங்கள் வெள்ளிக்கிழமை தணிக்கை செய்யப்பட்டன.
சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலா் கோகிலா தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜாமணி வாகனங்களின் இயக்குத் திறன் குறித்து சோதனை நடத்தினாா். படிக்கட்டுகளின் உறுதித்தன்மை, தீயணைப்பு கருவிகள் மற்றும் முதலுதவி பெட்டிகள், சிசிடிவி கேமரா, வேகக் கட்டுப்பாட்டு கருவிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
Advertisement
இந்த சோதனையில் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத மற்றும் தரமற்ற நிலையில் இருந்த 15 பேருந்துகளை இயக்க தடை விதிக்கப்பட்டது. குறைபாடுகளை சரிசெய்து மீண்டும் ஆய்வுக்குள்படுத்திய பிறகே வாகனங்களை இயக்க அனுமதி அளிக்கப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா். மேலும், சிறிய அளவிலான குறைபாடுகள் கண்டறியப்பட்ட 50 பேருந்துகளில் சீரமைப்பு பணிகளை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டது.