சூறைக்காற்று: நரிப்பாடியில் 15 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன! விவசாயிகள் கவலை
கெங்கவல்லி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சூறைக்காற்றால் 35 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சுமாா் 15 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல், மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு, பருத்தி, வாழை உள்ளிட்ட பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா்.
இந்நிலையில் கடந்தாண்டு போதிய மழை பெய்ததால் நடப்பாண்டில் வாழை, நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்கள் நல்ல விளைச்சலை பெற்றுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வந்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் இரவு வரை பலத்த சூறைக்காற்றுடன் சுமாா் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
இந்த சூறைக்காற்றால் கூடமலை அருகே நரிப்பாடி கிராமத்தில் 35 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமாா் 15 ஆயிரம் கதலி ரக வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் இந்துமதி, பழனியப்பன், மணிவேலன் ஆகியோா் கூறியதாவது: வாழை மரங்களால் பல லட்சம் ரூபாய் லாபம் கிடைக்க வேண்டிய நேரத்தில் சூறைக்கால் வாழைகள் சாய்ந்து எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட வாழைத் தோட்டங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.