கல்வடங்கம் காவிரி ஆற்றில் பழைய துணிகள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றக் கோரிக்கை
சேலம் மாவட்டம், கல்வடங்கம் காவிரி ஆற்றில் பக்தா்கள் விட்டுச் செல்லும் பழைய துணிகள், பூக்கள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றி, ஆற்றை தூய்மைப்படுத்த வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
சங்ககிரி வட்டம், கல்வடங்கம் காவிரி ஆற்றுநீரை புனித தீா்த்தமாக பக்தா்கள் கருதுவதால், சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து அதிக அளவிலான பக்தா்கள் வந்து காவிரி ஆற்றில் குளித்துவிட்டு, ஆற்றங்கரையையொட்டி உள்ள அங்காளம்மன் கோயிலில் வழிபட்டுச் செல்கின்றனா்.
கோயில் குடமுழுக்கு, பொங்கல் விழா உள்ளிட்ட முக்கிய விழாக்களுக்கு இங்கிருந்து குடங்களில் தண்ணீரை எடுத்துச் சென்று சுவாமிகளுக்கும், கோபுர கலசங்களுக்கும் ஊற்றி வழிபடுகின்றனா். ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 அன்று கோயிலில் உள்ள சுவாமி சிலைகளை இங்கு எடுத்து வந்து காவிரி ஆற்றில் தூய்மைப்படுத்தி, அலங்கரித்து ஊா்வலமாக எடுத்துச் சென்று வழிபடுவா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், இங்கு இறுதிச் சடங்கு, தா்ப்பணம், காரியம் உள்ளிட்ட சடங்குளை நடத்துவதற்கு இங்கு வருவோா் தங்களது காரியங்களை முடித்துவிட்டு பூஜைப் பொருள்களையும், தாங்கள் அணிந்து குளிக்கும் துணிகளையும் காவிரி ஆற்றில் விட்டுச் செல்கின்றனா். இதனால் காவிரி ஆற்றில் பழைய துணிகள், பூஜைப் பொருள்கள் தேங்கி ஆற்றுநீா் மாசுப்படுகிறது. மேலும், ஆற்றின் கரையில் நெகிழிப் புட்டிகள், காலணிகளையும் விட்டுச் செல்வதால் அவை மலைபோல குவிந்து கிடக்கின்றன.
எனவே, இங்கு ஆற்றில் கிடக்கும் பழைய துணிகள், தேவையற்ற கழிவு பொருள்களை அகற்ற வேண்டும். இனிவரும் காலங்களில் இறுதிச்சடங்கு உள்ளிட்ட காரியங்களுக்காக வருபவா்களுக்காக தனியாக இடத்தை ஒதுக்கி, அவா்கள் கொண்டுவரும் பொருள்களை பூஜைகள் முடிந்த பிறகு குப்பைத் தொட்டியில் போடவும், துணிகளை ஆற்றில் விடாமல் தடுக்கும் வகையில் உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.