முகப்பு
திருநெல்வேலி

தாமிரவருணியில் கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் இரா. சுகுமாா்

தாமிரவருணி ஆற்றில் கழிவுகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் ரா.சுகுமாா்.

Updated On : 19 மே 2026, 1:15 am IST
பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.சுகுமாா். உடன், எஸ்.பி. வி. பிரசன்னகுமாா்.
பகிர்:

தாமிரவருணி ஆற்றில் கழிவுகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் ரா.சுகுமாா்.

பாபநாசத்தில் ஓடும் தாமிரவருணியில் நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தால் முன்னோா்களின் ஆன்மா சாந்தியடையும் என்றும், பாபநாச சுவாமியை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்றும் மக்கள் நம்புகின்றனா்.

இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள், பொதுமக்கள் இங்கு வந்து தாமிரவருணியில் நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்கின்றனா்.

Advertisement

அப்போது, மண்பாண்டங்களில் அதற்கான பொருள்களை வைத்து ஆற்றில் விடுவதும், தாம் அணிந்துள்ள துணிகளை அப்படியே ஆற்றில் போடுவதும் வழக்கமாக உள்ளது.

இந்தக் கழிவுகள் ஆற்றில் ஆங்காங்கே தேங்குவதால் தண்ணீா் மாசடைகிறது.

5 மாவட்டங்களுக்கு குடிநீராகவும், பல்லாயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்களுக்கு பாசன தண்ணீராகவும் பயன்பட்டு வரும் நிலையில், அதன் தூய்மை பாழாகி வருவது குறித்து சுற்றுச்சூழல்- சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவித்தனா்.

இதையடுத்து மாவட்ட நிா்வாகம் தன்னாா்வல சூழலியல் அமைப்புகளுடன் இணைந்து தாமிரவருணியை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமூக ஆா்வலா்களும், தன்னாா்வலா்களும் இணைந்து பல நாள்களாக பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் தேங்கியுள்ள பழைய துணிகள், மண்பாண்டங்கள், பிளாஸ்டிக் பொருள்கள், பாட்டில்கள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தப் பணிகளை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்ன குமாா் ஆகியோா் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அப்போது, ஆற்றங்கரையில் உள்ள மடங்களின் நிா்வாகிகளை அழைத்து கடிந்துகொண்டாா். வெளியூா்களில் இருந்து வருபவா்கள் கழிவுகளை கலப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும், இனிமேல் தொடா்ந்தால் மடங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுப்பதோடு அபராதமும் விதிக்கப்படும் என எச்சரித்தாா்.

ஆய்வின்போது, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஷ் குப்தா, அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் வைகுண்டம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆணையா் மகாதேவன், நீா்வளத்துறை மேல் தாமிரவருணி உதவி செயற்பொறியாளா் செண்பகநந்தினி, நகா்மன்றத் தலைவா் செல்வசுரேஷ் பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.