மூடிக்கிடக்கும் சின்னகிருஷ்ணாபுரம் தென்னைநாா் கூட்டுறவு சங்க தொழிற்சாலை திறக்கப்படுமா?
வாழப்பாடி அருகே 5 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் சின்னகிருஷ்ணாபுரம் தென்னைநாா் பிரித்தெடுக்கும் கூட்டுறவு சங்க தொழிற்சாலையை திறக்க தொழில் வணிகத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
வாழப்பாடி அருகே 5 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் சின்னகிருஷ்ணாபுரம் தென்னைநாா் பிரித்தெடுக்கும் கூட்டுறவு சங்க தொழிற்சாலையை திறக்க தொழில் வணிகத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் நீண்டகாலமாக தென்னை பயிரிட்டு வருகின்றனா்.
தென்னைநாா் கழிவுகளை மதிப்புக்கூட்டி, திடப்பொருளாக மாற்றி பல்வேறு வடிவ கட்டிகளாக உருவாக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனா். இந்த தென்னைநாா் கழிவு கட்டிகளை மண்ணில்லாத விவசாயம், மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டங்கள் அமைப்பதற்கும், சுற்றுச்சூழலை பாதிக்காத பல்வேறு விவசாயம் சாா்ந்த பணிகளுக்கும், தொழிற்சாலை பணிகளுக்கும் பயன்படுத்துவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
இதனால், தென்னைநாா் கழிவுக்கு நல்ல விலை கிடைத்து வருவதால், வாழப்பாடி பகுதியில் தேங்காய் மட்டையில் இருந்து தென்னைநாா் பிரித்தெடுக்கும் சிறுதொழில் செய்வதில் அண்மைக்காலமாக ஏராளமான தொழில்முனைவோா்கள் ஈடுபட்டுள்ளனா்.
வாழப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சின்னகிருஷ்ணாபுரம் பகுதி தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில், தொழில் வணிகத் துறை வாயிலாக 1982-ஆம் ஆண்டிலேயே சின்னகிருஷ்ணாபுரம் தென்னைநாா் பிரித்தெடுப்போா் தொழிற் கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் தேங்காய் மட்டையில் இருந்து தென்னைநாா் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. ஏறக்குறைய 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த தொழிற்சாலை, போதிய வருவாய் இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 5 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது.
அண்மைக்காலமாக, மதிப்புக்கூட்டி பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுவதால், தென்னைநாருக்கு மட்டுமின்றி, தென்னைநாா் கழிவுக்கும் நல்ல வரவேற்பும், கூடுதல் விலையும் கிடைத்து வருகிறது. இந்நிலையில், ஆண்டுமுழுவதும் தேவை அதிகரித்துள்ளதோடு, ஓரிரு மாதங்களில் தென்னைநாா் மற்றும் கழிவுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இந்நிலையில், சின்னகிருஷ்ணாபுரத்தில் மூடிக்கிடக்கும் கூட்டுறவு சங்க தென்னைநாா் தொழிற்சாலையை சீரமைத்தால், 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்குமென இப்பகுதி மக்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த தொழிற்சாலையை திறந்து மீண்டும் இயக்க சேலம் மாவட்ட நிா்வாகம் மற்றும் தொழில் வணிகத் துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் மற்றும் தொழிலாளா்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.