கல் குவாரி ஒன்றில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த வெளிமாநில இளைஞர்களுக்கு சம்பளம் வழங்காததால் பட்டினியில் தவிக்கின்றனர்
பழனி, ஜூலை 9: பழனி அருகே கல் குவாரி ஒன்றில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த வெளிமாநில இளைஞர்களுக்குப் பல மாதங்களாகச் சம்பளம் வழங்காததால் பட்டினியில் தவிக்கின்றனர். சம்பளம் கோரி அரசு அதிகாரிகளிடம்
பழனி, ஜூலை 9: பழனி அருகே கல் குவாரி ஒன்றில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த வெளிமாநில இளைஞர்களுக்குப் பல மாதங்களாகச் சம்பளம் வழங்காததால் பட்டினியில் தவிக்கின்றனர். சம்பளம் கோரி அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் அவர்கள் அலைக்கழித்ததால் ஊர் திரும்ப வழியின்றி தவித்து வருகின்றனர்.
பழனியில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள அத்திமரத்து வலசு அருகே ஸ்ரீ உத்திரகாளியம்மன் ப்ளூ மெட்டல்ஸ் என்ற பெயரில் மிகப் பெரிய கல் குவாரி கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. சுமார் 170 ஏக்கர் பரப்பளவில் குவாரியுடன், கல் உடைக்கும் தொழிற்சாலையும் இங்கு இயங்கியுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த அருள்மொழி மணிகண்டராஜ் என்பவர் இதன் உரிமையாளர் ஆவார். இவருக்கு பொள்ளாச்சி அருகே முத்தூர் என்ற இடத்திலும் கல் குவாரி உள்ளது.
ஸ்ரீ உத்திரகாளியம்மன் ப்ளூ மெட்டல்ஸில் 10-க்கும் மேற்பட்ட லாரிகள், ஜேபிசிக்கள், புல்டோசர்கள், ஜெனரேட்டர்கள் எனப் பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் உள்ளன.
கடந்த 4 ஆண்டுகளாக அரை முதல் ஒன்ணேமுக்கால் இஞ்ச் அளவிலான ஜல்லிக் கற்கள், க்ரஷர் டஸ்ட் எனப் பல கோடி ரூபாய்க்கு இங்கிருந்து கற்கள் உடைத்து எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு லாபகரமாக இந்நிறுவனம் இயங்கியுள்ளது. தற்போது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜல்லிக் கற்களும் இருப்பு உள்ளது.
இந் நிலையில் இரண்டு மாதங்களாக குவாரியின் இயக்கம் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இங்கு லாரிகள், இயந்திரங்கள் இயக்கும் பணி மற்றும் மேற்பார்வைப் பணிக்காக திண்டுக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கல் உடைத்து க்ரஷர் ஆலையில் ஏற்றி அதை லோடு செய்யும் கடினமான பணிகளுக்கு ஆந்திரம், ஒரிசாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஏஜெண்டுகள் மூலம் வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு சுமார் 300 முதல் 350 ரூபாய் வரை சம்பளம் எனப் பேசி அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களுக்குப் போதிய ஊதியம் தரப்படவில்லை.
இவர்கள் அனைவரும் தங்குவதற்கு தகர சீட் பொருத்தப்பட்ட ஹாலோ பிளாக்ஸ் மூலம் கட்டப்பட்ட அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு அறையில் ஏராளமானோர் தங்கியுள்ளனர்.
இந்தத் தொழிலாளர்களுக்கு 3 மாதங்களாகச் சம்பளம் தரப்படவில்லை. இதனால் இவர்களுக்கு சுமார் ரூ.30 ஆயிரம் வரை கடனாகி விட்டது. இவர்களால் எங்கும் செல்ல முடியாத நிலையில் பட்டினி கிடக்கின்றனர்.
தமிழ் தெரியாத காரணத்தால் யாரிடம் சொல்வது? என இவர்கள் ஏங்குவதாக ஒரிசாவைச் சேர்ந்த சுமித், ஆந்திரத்தைச் சேர்ந்த சீதாராம் ரெட்டி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த ஆலைக்கு மின் விநியோகமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இங்கு வேலை செய்யும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேற்பார்வையாளர்கள் சுதாகர் மற்றும் பலர் பொள்ளாச்சி சென்று உரிமையாளரைப் பார்த்தபோது அவர்கள் தொழிலாளர்களைச் சந்திக்கவில்லை.
தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் சார்பில் ஒருவர், வெளிமாநிலத்தவர்தானே இன்னும் 20 நாள்கள் விட்டால் அவர்களாகவே சென்று விடுவார்கள். தொந்தரவு செய்தால் உங்கள் மீது காவல் துறையினரிடம் புகார் கொடுத்து உள்ளே தள்ளிவிடுவோம் என மிரட்டியுள்ளார்.
இதைத் தொடர்ந்து வெளிமாநிலத் தொழிலாளர்களின் நிலையைக் கண்டு வருந்திய அவர்கள் பழனி தொழிலாளர் நல அலுவலகத்துக்கு பணியாளர்கள் அனைவரையும் அழைத்துச் சென்று கேட்டபோது, அவர்கள் அதைக் கண்டு கொள்ளாமல் திங்கள்கிழமைக்கு மேல் வாருங்கள் எனத் தெரிவித்தனராம்.
தற்போது அனைவரும் ஆளரவமற்ற அந்த ஆலையில் இருட்டில் அடைந்துள்ளனர். பொள்ளாச்சியில் உள்ள குவாரியிலும் கடந்த 40 நாள்களாக இதே நிலைமை ஏற்பட்டுள்ளது என அங்குள்ள தொழிலாளர்களைத் தொடர்பு கொண்டபோது தகவல் தெரிவித்தனர்.
நல்ல நிலையில் இயங்கிய ஆலைகளை நஷ்டக் கணக்கு காட்டி முடக்கிப் பணம் பார்க்க உரிமையாளர்கள் ஏற்பாடு செய்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொத்தடிமைகளாக உள்ள தங்களுக்கு சம்பளத்தைக் கொடுத்தால்போதும், தமிழகம் பக்கமே வரமாட்டோம். எங்கள் குழந்தைகள், பெற்றோரைப் பார்க்காமல், பேச முடியாமல் தவித்து வருகிறோம் எனக் கூறும் இந்தத் தொழிலாளர்களை மாவட்ட உயர் அதிகாரிகள்தான் காப்பாற்ற முன்வரவேண்டும்.