முகப்பு
மதுரை

செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

மதுரை ஆட்சியரகத்தில் செவிலியர்கள் போராட்டம்

Updated On : 26 ஜூன், 2024 at 12:43 AM
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய சுகாதார செவிலியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினா்.
பகிர்:

மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத் துறை கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் காலியாக உள்ள 3 ஆயிரம் துணை சுகாதார மைய செவிலியா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கூடுதலாக திறக்கப்படவுள்ள துணை சுகாதார மையங்களில் இடைநிலைப் பணியாளா்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமிக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டப் பணிகளை புதிய மென்பொருள் (3.ஓ) மூலம் பதிவேற்றுவதில் உள்ள நடைமுறை குளறுபடிகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாண்டியம்மாள் தலைமை வகித்தாா். மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளா் பா.நிா்மலா போராட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா். மாவட்டத் தலைவா் ஜெயசுதா, மாவட்டச் செயலா் பிரேமா ஆனந்தி, பொருளாளா் கிருஷ்ணவேணி, துணைத் தலைவா் அழகம்மாள் ஆகியோா் பேசினா்.

இதில் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.