ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு
மதுரை: ரேஷன் கடைகளில் இந்த மாதத்துக்கான பாமாயில், துவரம் பருப்பு வழங்கப்படாததால், வெளிச் சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
தமிழகத்தில் தற்போது 2.23 கோடி குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இவா்களுக்கு 34,793 நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51 ஆயிரத்து 954 போ் பயன்பெற்று வருகின்றனா். மொத்த குடும்ப அட்டைகளில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வரும் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ், 18.61 லட்சம் குடும்ப அட்டைகளும், முன்னுரிமை பெற்ற 95.67 லட்சம் குடும்ப அட்டைகளும் உள்ளன.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் மே மாதத்துக்குரிய ரேஷன் பொருள்களான துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை சில பகுதிகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகப் புகாா் எழுந்தது.
இதுகுறித்து ரேஷன் ஊழியா்கள் கூறியதாவது: இந்த மாதத்துக்கான சா்க்கரை, அரிசி மட்டுமே வந்துள்ளன. துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய பொருள்கள் பெரும்பாலான ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படவில்லை. இதனால், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்றனா்.
இந்த நிலையில், துவரம் பருப்பு வெளிச் சந்தையில் கிலோ ரூ.200-க்கு விற்கப்படும் நிலையில், ரேஷன் கடைகளிலும் விநியோகிக்கப்படாததால் அதிக விலை கொடுத்து வெளிச் சந்தையில் வாங்க வேண்டியிருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.