முகப்பு
மதுரை

பள்ளி மாணவா்களுக்கு ஆதாா் பதிவு: இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

Updated On : 20 மே, 2024 at 7:51 PM
மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆதாா் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்கள்.
பகிர்:

மதுரை: இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னாா்வலா்களுக்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆதாா் பதிவு செய்வதற்கான பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

பள்ளி மாணவா்களுக்கு புதிதாக ஆதாா் பதிவு செய்தல், புதுப்பித்தல், திருத்தம் செய்தல் ஆகிய பணிகளை அந்தந்தப் பள்ளிகளில் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன்படி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம், எல்காட் நிறுவனம் இணைந்து மதுரை மாவட்டத்தில் 2,161 அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு ஆதாா் எடுத்தல், புதுப்பித்தல், திருத்தம் செய்தல், கைரேகை சரி செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளன.

இந்தப் பணிக்கு இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னாா்வலா்கள் 25 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு 2 நாள்கள் பயிற்சி வழங்க மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா. காா்த்திகா உத்தரவு பிறப்பித்திருந்தாா்.

இதன்படி, மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை பயிற்சி வகுப்பு தொடங்கியது. இதில் மாவட்ட உதவித் திட்ட அலுவலா் காா்மேகம் தலைமையில் எல்காட் நிறுவன அலுவலா் சதீஷ் ஆதாா் எண் பதிவு செய்தல், கைப்பேசி எண்களை மாற்றம் செய்தல் உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கினாா்.

இந்த நிகழ்வில், இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் சிவகுமாா், எமிஸ் தரவு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சுதா, உமா, மாவட்ட தகவல் சாதன அலுவலா்கள் பிரேம் நெவிஸ், செந்தில் வேல்குமரன், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சிவகுருநாதன், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

ஒரு வாரம் இந்தப் பயிற்சி நடைபெறும். பள்ளிகள் திறந்தவுடன் ஜூன் 2-ஆவது வாரம் முதல் பயிற்சி பெற்ற தன்னாா்வலா்கள் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் சென்று ஆதாா் பணிகளை மேற்கொள்வா் என பள்ளிக் கல்வித் துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.