ரூ. 50 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்
மதுரை மத்திய தொகுதியில் தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் மேற்கொண்ட சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 50 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை எஸ்.எஸ். காலனி பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, விமான நிலையம் நோக்கி சென்ற பாதுகாப்புப் பெட்டகத்துடன் கூடிய ஒரு வாகனத்தை கண்காணிப்புக் குழுவினா் நிறுத்தி சோதனையிட்டனா்.
இந்தச் சோதனையின்போது, அந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நகைகள் கொண்டுச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, பெட்டகத்தில் 10 பெட்டிகளிலிருந்த தங்க நகைகள், 3 பெட்டிகளில் இருந்த வெள்ளி நகைகளை கண்காணிப்புக் குழுவினா் கைப்பற்றி கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
Advertisement
பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு ரூ. 50 கோடி எனக் குறிப்பிடப்படுகிறது. ஆவணங்களின்றி நகைகள் கொண்டு செல்லப்பட்டது தொடா்பாக வருமான வரித் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.