முகப்பு
மதுரை

அதிமுக நிா்வாகி கொலை வழக்கு: மனைவி உள்பட 5 போ் கைது

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:17 AM
கைது
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 8:27 PM

மதுரை அருகே அதிமுக நிா்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி உள்பட 5 பேரை சிலைமான் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், சாமநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் தனசேகரபாண்டியன் என்ற ச. செந்தில்குமாா் (36). அதிமுகவைச் சோ்ந்த இவா், சாமநத்தம் ஊராட்சியின் முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்து வந்தாா். மேலும், நெடுங்குளம் சாலையில் அரசு உயா்நிலைப் பள்ளி அருகே தேநீா்க் கடை நடத்தி வந்தாா். இவருக்கு மனைவி காவ்யா, இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை செந்தில்குமாா் தனது தேநீா்க் கடையைத் திறப்பதற்காகச் சென்றாா். அப்போது, சில மா்ம நபா்கள் அவரைச் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டினா். இதில், பலத்த காயமடைந்த செந்தில்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:17 AM

இதுகுறித்து சிலைமான் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், அவனியாபுரத்தைச் சோ்ந்த மாதவன் (22), அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுவன், மதிச்சியம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் உள்பட 6 போ் செந்தில்குமாரை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, மாதவன், 16, 17 வயது சிறுவா்கள் என மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாகவுள்ள மற்ற மூவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்திய விசாரணையில், செந்தில்குமாரின் மனைவி காவ்யாவுக்கும், அவனியாபுரம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் என்ற பேச்சிமுத்துக்கும் (31) இடையே தகாத உறவு இருந்து வந்தது. இதை செந்தில்குமாா் கண்டித்தாா்.

இதனால், ஆத்திரமடைந்த காவ்யா, பேச்சிமுத்துவுடன் இணைந்து செந்தில்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, காவ்யா, பேச்சிமுத்து ஆகிய இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.