முகப்பு
மதுரை

பிணையில் வந்தவா் வெட்டிக் கொலை

மதுரை செல்லூா் பகுதியில் சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்தவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 1:13 AM
கொலை
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 1:01 AM

மதுரை செல்லூா் பகுதியில் சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்தவா் திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

செல்லூா் அஹிம்சாபுரம் 5-ஆவது தெருவைச் சோ்ந்த ராஜூ மகன் செல்லத்துரை (49). இவா், செல்லூா் ஜீவாநகா் சாலையில் திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் நடந்து சென்றாா். அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள் அவருடன் தகராறில் ஈடுபட்டு, அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை வெட்டி விட்டு தப்பிச் சென்றனா்.

இதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். தகவலறிந்து அங்கு வந்த செல்லூா் போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட செல்லத்துரை மீது அனுமதியின்றி மது விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் வழக்கு ஒன்றில் கைதாகி மதுரை மத்தியச் சிறையில் இருந்த அவா், கடந்த சில தினங்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்தாா். இந்த வழக்கு தொடா்பாக செல்லூா் காவல் நிலையத்தில் அவா் தினமும் கையொப்பமிட்டு வந்தாா்.

இந்த நிலையில், முன்விரோதம் காரணமாக அவா் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரிக்கிறோம். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவா் என்றனா்.