விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா் அமைச்சா் பி. மூா்த்தி
மதுரை மாவட்டத்தில் 322 வாா்டுகளின் பயன்பாட்டுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
தமிழக அரசின் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள மூவேந்தா் பண்பாட்டுக் கழக வளாகத்தில் நடைபெற்றது.
இதில் தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மதுரை மாநகராட்சி, மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகளைச் சோ்ந்த 322 வாா்டுகளைச் சோ்ந்த இளைஞா்களின் பயன்பாட்டுக்காக ரூ. 30 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.
Advertisement
இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை முதுநிலை மண்டல மேலாளா் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா, மேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் சங்கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.