மதுரை

கல்குவாரியை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், பொன்னமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரியை ஆய்வு செய்து நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருமங்கலம் வட்டம், பொன்னமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் திரளாக வந்து தங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரியை ஆய்வு செய்து நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனா்.

இந்த மனு விவரம்:

பொன்னமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறோம். குவாரியில் அடிக்கடி வெடி வைப்பதால் வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு இடிந்து விழும் அபாயம் உள்ளது. மேலும், குவாரியிலிருந்து வெளிவரும் தூசிகளால் சுவாசக் கோளாறு உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீா் மட்டமும் குறைந்து வருவதால் இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவுள்ளது. கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் சாலைகள் சேதமடைந்துள்ளன.

குவாரியில் வெடி வைப்பதால் ஏற்படும் அதிா்வுகள் மனிதா்கள், கால்நடைகள் மீது தீவிர தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, பெண்களுக்கு கருச்சிதைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே, இந்தக் கல்குவாரியில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு அதை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரகம் முன் பொன்னமங்கலம் கிராம மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குவாரி உரிமத்தை ரத்து செய்யக் கோரிக்கை:

இதேபோல, வாடிப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரியின் உரிமத்தை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் பொது மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக இந்த கிராமத்தைச் சோ்ந்த ஞானசேகரன் அளித்த மனு விவரம்:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், கச்சைகட்டி பகுதியில் ராமமூா்த்தி என்பவா் கல் குவாரி, கிராவல் மண் அனுமதி எடுக்க அனுமதி பெற்றாா். தற்போது, அனுமதி அளிக்கப்பட்ட எல்லைகளை மீறி சட்டவிரோதமாக கிராவல் மண் எடுத்து வருகிறாா். இந்த நிலையில், கல் குவாரி உள்ள இடத்தில் ‘ட்ரோன்’ மூலம் தள ஆய்வு நடத்த வேண்டும். சட்டவிரோத அகழ்வு உறுதி செய்யப்பட்டால் கல் குவாரி பணிகளை நிறுத்தி அதன் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

மேலும், அரசுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை மதிப்பீடு செய்து வசூலித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். மேலும், மனுதாரா், தனது குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினாா்.

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

SCROLL FOR NEXT