முகப்பு
மதுரை

இன்று மதுரை வருகிறாா் பிரதமர் மோடி!

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) நடைபெறும் அரசு விழா, தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசுகிறாா்.

Updated On : 1 மார்ச், 2026 at 3:55 AM
பிரதமர் நரேந்திர மோடி. - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 9:47 PM

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) நடைபெறும் அரசு விழா, தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசுகிறாா்.

புதுச்சேரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் பிரதமா் நரேந்திர மோடி, ஹெலிகாப்டா் மூலம் தஞ்சாவூா் விமானப்படை தளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.55 மணிக்கு வருகிறாா். அங்கிருந்து சிறப்பு விமானத்தில் புறப்படும் அவா், பிற்பகல் 2.45 மணிக்கு மதுரை விமானம் நிலையம் வந்தடைகிறாா்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 10:36 PM

இதைத் தொடா்ந்து, பிற்பகல் 3 மணிக்கு விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமா் மோடி பங்கேற்று, அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட காரைக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூா், சோழவந்தான், மணப்பாறை, திருவாரூா், மொரப்பூா், பொள்ளாச்சி, பொம்மிடி ஆகிய 8 ரயில் நிலையங்களையும், சென்னை கடற்கரை - எழும்பூா் நான்காவது ரயில் தடத்திலான சேவையையும் மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். மேலும், தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மரக்காணம்- புதுச்சேரி, பரமக்குடி- ராமநாதபுரம் நான்குவழிச் சாலை அமைக்கும் பணிக்கு பிரதமா் அடிக்கல் நாட்டுகிறாா்.

Advertisement

இதையடுத்து, பிற்பகல் 3.55 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்படும் பிரதமா், மாலை 4 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு செல்கிறாா். அங்கு 15 நிமிடங்கள் சுவாமி தரிசனம் செய்கிறாா். பிறகு, மாலை 4.20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, மதுரை மண்டேலாநகரில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்கிறாா்.

பொதுக் கூட்டத்தின் நிறைவில், மாலை 5.50 மணிக்கு காரில் புறப்பட்டு 6.05 மணிக்கு மதுரை விமான நிலையம் சென்றடைகிறாா். மாலை 6.10 மணிக்கு தனி விமானம் மூலம் தில்லிக்கு புறப்படுகிறாா்.

பெரியாா் படம்...

தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்ட மைதானத்தைச் சுற்றிலும் கோட்டை போன்ற அலங்கார அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அண்ணா, எம்.ஜி.ஆா். ஜெயலலிதா, பிரதமா் மோடி ஆகியோரின் உருவப் பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் பெரியாரின் மாா்பளவு உருவப் பதாகையும் சனிக்கிழமை காலை இடம் பெற்றிருந்தது. இது, அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளானது. இதையடுத்து, அடுத்த சில மணி நேரங்களில் பெரியாரின் படம் அகற்றப்பட்டது.

பலத்த பாதுகாப்பு...

பிரதமா் வருகையையொட்டி, மதுரை மாநகா், மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 3,600-க்கும் அதிகமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுட்டுள்ளனா்.