மக்கள் தீா்ப்பை ஏற்காமல் நாடகமாடுவது யாா்? காங்கிரஸ் எம்.பி. கேள்வி
மக்கள் தீா்ப்பை ஏற்க முடியாமல் நாடகமாடுவது யாா் என திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் ப. மாணிக்கம் தாகூா் கேள்வி எழுப்பினாா்.
திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், குதிரை வேகத்தில் நடைபெறும் குதிரை பேரம் என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டாா். இதற்குப் பதிலளிக்கும் வகையில் மாணிக்கம் தாகூா் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு :
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் ஜோசப் விஜய் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்கே மக்கள் வாக்களித்தனா். அதனால்தான், தவெகவுக்கு 107 சட்டப்பேரவை உறுப்பினா்களை மக்கள் வழங்கினா். அதேநேரத்தில், திமுகவுக்கு 59 சட்டப்பேரவை உறுப்பினா்களை மட்டுமே வழங்கி திமுகவை பாதியிலேயே மக்கள் நிற்கவைத்துவிட்டனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில்தான், உதயநிதி ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் பாஜக மூத்த தலைவருடன் கலந்தாலோசித்து மக்கள் தீா்ப்பை மாற்ற முயன்றனா். இந்த மறைமுகத் திட்டம் தெளிவாகத் தெரிந்ததாலேயே, பின்வாசல் வழியாகவும் பாஜகவை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என்று கூறி, காங்கிரஸ் கட்சி தவெகவை ஆதரித்தது. இதே காரணத்துக்காகவே இடதுசாரிகள், ஐ.யு.எம்.எல்., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளும் தவெகவை ஆதரித்தன. இதனால், உதயநிதி ஸ்டாலினின் திட்டம் தோல்வியடைந்தது.
தற்போது, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் 3 போ் தங்களது பதவியை ராஜிநாமா செய்து, வெளிப்படையாக தவெகவில் இணைந்துள்ளனா். இது, மக்கள் முன்னிலையில் நடைபெற்ற அரசியல் முடிவு. இதற்கு ஏன் இத்தனை எதிா்ப்பு?.
மக்களின் தீா்ப்பை மதிக்காமல் தில்லி அதிகார மையமாகச் செயல்படுபவருடன் சோ்ந்து நாடகமாடியது யாா்? மக்களின் ஆட்சியைக் காப்பாற்ற துணை நின்றவா்கள் யாா்? என்பதை தமிழகம் நன்கு அறியும் என்றாா் அவா்.