திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தலைமைக் காவலர் உயிரிழந்தார்.
வத்தலகுண்டு அடுத்துள்ள விராலிப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கிடுசாமி (42). வடமதுரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த இவர், திண்டுக்கல் சீலப்பாடி போலீஸ் குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்நிலையில், இரவு பணிக்காக புதன்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்லிலிருந்து வெங்கிடுசாமி சென்றார். திண்டுக்கல்- திருச்சி 4 வழிச்சாலையில் வடமதுரை புறவழிச்சாலை அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்த வெங்கிடுசாமி, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய கார், சம்பவ இடத்தில் நிறுக்காமல் திருச்சி நோக்கி சென்றது. இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீஸார், திருச்சி மாவட்டம் வையம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பொன்னம்பலப்பட்டி சுங்கச் சாவடியை கடந்து செல்ல முயன்ற அந்த காரை நிறுத்தி போலீஸார் சோதனையிட்டனர். விசாரணைக்குப் பின், காரை ஓட்டி வந்த புதுச்சேரி குயவர்பாளையத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் ஜெகன் மோகன் (32) என்பவரை கைது செய்தனர்.