இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வு, சிலரால் திட்டமிட்டு தடுக்கப்படுகிறது என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்தார்.
திண்டுக்கல் இலக்கியக் களம் நடத்தும் 6ஆவது புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு, 6ஆம் நாள் நிகழ்ச்சியாக கல்லூரி மாணவர்களுக்கு வினாடி வினா இறுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற சிந்தனையரங்கம் நிகழ்ச்சிக்கு இலக்கிய களம் அமைப்பின் இணைச் செயலர் மு.சரவணன் தலைமை வகித்தார். இதில் "திரை மாற்றத்திற்கான கருவி' என்ற தலைப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாவது:
நாடகத்துறையில் இருந்து உருவான சினிமா, திராவிட இயக்கங்கள் ஆட்சியை கைப்பற்றுவதற்கான கருவியாகவும் விளங்கியது. ஆனால், ஒரு கால கட்டத்தில் கொள்கைகளை வலியுறுத்துவதற்குப் பதிலாக தனிமனிதனை துதிபாடும் ஊடகமாக சினிமா மாற்றப்பட்டது. சமூக கருத்துக்களை பேசும் திரைப்படங்கள் அதிகம் உருவாகவில்லை.
சினிமா எடுப்பவர்கள் தவறான, பொய்யான தகவல்களை முன்வைக்கின்றனர். அதன் மூலம் உளவியல் ரீதியான பாதிப்புகளை மக்களிடம் ஏற்படுத்துகின்றனர். பொய், உண்மையாக நம்ப வைக்கப்படுகிறது. கலை மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்ற நிலை மாற்றப்பட்டது.
ஆனால், அதையும் கடந்து குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அரசியல் எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதனை திட்டமிட்டு சிலர் தடுக்க முயற்சிக்கின்றனர். அதே நேரத்தில் மாற்று சிந்தனைகளை வரவேற்கும் ரசிகர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமே உள்ளனர். சமூகத்தில் உள்ள முரண்பாடுகளை நீக்குவதற்கு, அதிகமான புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றார்.