தொடர் விடுமுறையை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தொடர் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால், விஞ்ச் நிலையம், ரோப் கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 3 விஞ்ச்சுகளில் ஒன்று பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்ததால், டிக்கெட் பெற பக்தர்கள் காத்திருந்தனர்.
மேலும், மலைக் கோயிலில் தர்மதரிசனம், ரூ.10, ரூ.100 கட்டண வரிசைகளில் பக்தர்கள் காத்திருந்தனர். மலைக் கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு மற்றும் தங்கமயில் புறப்பாட்டை ஏராளமான பக்தர்கள் பார்த்து தரிசித்தனர்.