ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் சாம்பார் வெள்ளாக்கு போதிய விலை கிடைக்காததால் விரக்தியடைந்த விவசாயிகள் சாலையில் கொட்டிவிட்டுச் சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறிச்சந்தைக்கு தினசரி பல வகையான காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இங்கு விற்பனைக்கு வரும் காய்கறிகள் 60 சதவீதம் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கேரள மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் சாம்பார் வெள்ளரி கிலோ ரூ.3-க்கு விற்பனையானது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று அதிக வரத்து மற்றும் கேரள வியாபாரிகளின் வரத்து குறைவு காரணமாக சாம்பார் வெள்ளரி விற்பனையாகாமல் தேக்கம் ஏற்பட்டது.
அவற்றை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த விவசாயிகள் திண்டுக்கல்-பழனி சாலை லெக்கையன்கோட்டை அருகே வெள்ளரிக்காய்களை சாலையோரமாக கொட்டி விட்டு சென்றுள்ளனர்.
முருங்கைக்காய்,தக்காளி போன்ற காய்களுக்கு கிடைக்கும் விலை போல் இந்த சாம்பார் வெள்ளரிக்கு கிடைக்காததால் அவற்றை பயிர் செய்த விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.