பழனியில் குரும்பர் சமுதாய மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
பழனியில் குரும்பர் சமுதாய மாணவ, மாணவியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், புதிய கண்டுபிடிப்பை செய்து காண்பித்த மாணவர் பாராட்டப்பட்டார்.
பழனியில் குரும்பர் சமுதாய மாணவ, மாணவியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், புதிய கண்டுபிடிப்பை செய்து காண்பித்த மாணவர் பாராட்டப்பட்டார்.
பழனி அடிவாரப் பகுதியில், குரும்பர் சமுதாயத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு, மாநிலச் செயலர் ராம்பிரகாஷ் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் மகுடீஸ்வரன் முன்னிலை வகித்தார்.
பழனி அருகே அக்கமநாயக்கன்புதூரைச் சேர்ந்த லட்சுமணன் மகன் மதன்குமார். நெய்க்காரபட்டியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வரும் இவர், வீட்டுக்கு வெளியே எங்கிருந்தாலும் செல்லிடப்பேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்பி, வீட்டில் உள்ள விளக்குகள், மின்விசிறி, குளிர்சாதனப் பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம், மிக்சி உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை இயக்கவும், நிறுத்தவும் முடியும் எனக் கூறி, அதை செய்து காண்பித்தார். இதை தான், சிறிய ஜிஎஸ்எம் போர்டு மூலம் உருவாக்கியதாக மதன்குமார் தெரிவித்தார்.
மாணவரின் இந்தக் கண்டுபிடிப்பை குரும்பர் சமுதாயத்தினர் பாராட்டி, சிறப்பு பரிசு வழங்கினர்.
முன்னதாக, செயலர் கருப்புச்சாமி, பொருளாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். நிகழ்ச்சியில், சமூக நீதிப் பேரவை ஒருங்கிணைப்பாளர் மனோகரன், மாநில அவைத் தலைவர் கருப்புச்சாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.