கார்களில் விபத்து தடுப்பு சென்சார்களை உருவாக்குவது போன்ற நவீன செயல்திட்டங்களை உருவாக்க மின்னணு மற்றும் மின்னியல் துறை பொறியாளர்கள் முன் வர வேண்டும் என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரியில், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறை மாணவர்களுக்கு, வடிவமைப்புத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி வளாக இயக்குநர் ஆர்.சந்திரன் தலைமை வகித்தார்.
கல்லூரி முதல்வர் எம்.சரவணன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக நாகப்பட்டினம் இஜிஎஸ் கல்லூரி இணைப் பேராசிரியர் எம்.விஜயகுமார் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், இயந்திரவியல் துறை பொறியாளர்களுக்கு கிடைத்து வந்த முக்கியத்துவம், இன்றைக்கு மின்னியல் மற்றும் மின்னணுவியில், தகவல் தொடர்பில் பொறியாளர்களுக்கு கிடைத்து வருகிறது. நவீன உலகில், கார்களின் வடிவமைப்பு மட்டுமின்றி அதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களும் நாள்தோறும் மாறி வரும் சூழல் உள்ளது.
அந்த வகையில் கார்களில் தானியங்கி கதவுகள், தானியங்கி கிளட்ச் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கான புதிய மற்றும் நவீன செயல்முறை திட்டங்களை, மின்னியல் மற்றும் மின்னணுவியில் பொறியாளர்களிடமிருந்து கார் தொழிற்சாலைகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. அதேபோல், விபத்துக்களை தடுப்பதற்கான சென்சார்களை உருவாக்குவதற்கு அதிக
முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
வாகன வடிவமைப்பு மட்டுமின்றி, மருத்துவத்துறை மற்றும் தொடர்பியல் துறைகளிலும் நவீன வடிவமைப்புகளுக்கான செயல்திட்டங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதற்கான ஆய்வுகளில் ஈடுபடும் பொறியியல் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றார்.
நிகழ்ச்சியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவர் பி.பூமா தேவி, மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறைத் தலைவர் எஸ்.கார்த்திகை லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.