முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மலைவாழ் மக்கள் முற்றுகை

கொடைக்கானல் அருகே பள்ளங்கி கோம்பை பகுதியில் அடிப்படை வசதி கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மலைவாழ் மற்றும் ஆதிவாசி மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Updated On : 15 மே, 2018 at 12:37 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

கொடைக்கானல் அருகே பள்ளங்கி கோம்பை பகுதியில் அடிப்படை வசதி கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மலைவாழ் மற்றும் ஆதிவாசி மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளான பள்ளங்கி, கோம்பை, ஆலத்துரை, காமராஜர் நகர், அடிசரை, பெருங்காடு, கடல்கொடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளதை சரி செய்யவும், குடிநீர், மருத்துவ மற்றும் போக்குவரத்து வசதி கோரி அப்பகுதிகளைச் சேர்ந்த ஆதிவாசி மற்றும் மலைவாழ் மக்கள் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியிலிருந்து ஊர்வலமாக ஆனந்தகிரி வழியாகச் சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து அவர்கள் கூறும் போது, எங்களுக்கு அடிப்படை வசதி செய்து தரா விட்டால் கோடை விழாவுக்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டியும், பள்ளங்கி, கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் சார்பில் போராட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெறும் என்றனர்.
இதுபற்றி கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரன் கூறியதாவது:
இப்பகுதிகளுக்கு சுமார் ரூ.1 கோடி செலவில் சாலை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைத்துக் கொடுப்பதற்காக டெண்டர் விடப்பட்டு பூஜையும் நடைபெற்றுள்ளது. பல்வேறு காரணங்களால் அப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் மீண்டும் அப்பணி தொடங்க உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.