திண்டுக்கல்லில் மனைவி வெட்டிக் கொலை: கணவர் கைது
திண்டுக்கல்லில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல் சவேரியார்பாளையம் ஜீவாநகரைச் சேர்ந்தவர் செ.அருண் (34). இறைச்சிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தனசீலி (30). காதல் திருமணம் செய்த இத்தம்பதியருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே தனசீலியின் நடத்தையில் அருணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, தனது குழந்தைகள் மற்றும் தாய் புஷ்பாவுடன் தனசீலி வசித்து வந்தார். மேலும், வருமானத்துக்காக பழைய இரும்புக் கடைக்கு தனசீலி வேலைக்கு சென்று வந்தார். இதனை விரும்பாத அருண், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக கடந்த 15 நாள்களுக்கு முன் தனசீலி, திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், மது அருந்திவிட்டு வந்து அருண் தொந்தரவு செய்வதாக தெரிவித்திருந்தாராம்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை வேலைக்கு செல்வதற்காக, நன்னப்பாநகர் வழியாக நடந்து சென்ற தனசீலியை, அருண் வழிமறித்து கத்தியால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து அங்கு வந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸார், தனசீலியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய அருணையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.