கொடைக்கானலில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் சாவு; இருவர் காயம்
கொடைக்கானலில் திங்கள்கிழமை விளம்பரப் பதாகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்து தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். மேலும் இரு தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
கொடைக்கானலில் திங்கள்கிழமை விளம்பரப் பதாகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்து தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். மேலும் இரு தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
கொடைக்கானலில் கோடை விழா மலர்க் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சனிக்கிழமை வந்தார். இதையொட்டி கொடைக்கானல் பகுதியில் முதல்வரை வரவேற்று பல்வேறு இடங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் அந்த விளம்பரப் பதாகைகளை அகற்றும் பணியில் திங்கள்கிழமை திருவண்ணாமலையைச் சேர்ந்த சுமார் 20 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்லறைமேடுப் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையை 3 பேர் அகற்றிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பதாகை மின்கம்பியில் பட்டதால் மணிகண்டன் (25) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சக பணியாளர்கள் புகழேந்தி(34), மதியழகன்(25) ஆகியோர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.