கொடைக்கானல் மலைச்சாலையில் மண்சரிவு காரணமாக சனிக்கிழமை காலை காட்ரோடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலாப் பயணிகள், ஆய்வுக்கு வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் முறையிட்டனர். இதனைத்தொடர்ந்து இச்சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு கொடைக்கானல் மலைச்சாலையில் மண் சரிவு ஏற்பட்டதை ஆய்வு செய்வதற்காக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் ஆகியோர் சென்றனர். இதனிடையே, மண் சரிவு மற்றும் மரம் முறிவு காரணமாக, மலைச்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பயணிகளின் வாகனங்கள், காட்ரோடு நுழைவுப் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், ஆய்வுக்கு வந்த துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் சி.சீனிவாசன் ஆகியோரிடம், மலைச் சாலையில் அனுமதிக்க கோரி சுற்றுலாப் பயணிகள் முறையிட்டனர்.
மண் சரிவு மற்றும் முறிந்து விழுந்துள்ள மரங்கள் அகற்றப்பட்டவுடன், 2 மணி நேரத்தில் அனைத்து வாகனங்களும் கொடைக்கானல் செல்ல அனுமதிக்கப்படும் என உறுதி அளித்தனர். சில சுற்றுலாப் பயணிகள், துணை முதல்வரை யார் என காவல்துறையினரிடம் கேட்டு அறிந்து கொண்டு அவருடன் சுய படம் (செல்பி) எடுத்துக் கொண்டனர்.
பெரியகுளம்: சாலை சீரமைப்புக்குப் பிறகு முதற்கட்டமாக மலையிலிருந்து கீழிறங்கும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அதன்பிறகு வத்தலகுண்டு பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள மண்சரிவுகளை சீரமைத்து வருவதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.