கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில், பழனிக்கு ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்களும், முருக பக்தர்களும் ஏராளமானோர் வந்திருந்தனர். இதனால், மலைக் கோயிலுக்கு செல்லும் விஞ்ச் மற்றும் ரோப் கார் நிலையங்களில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அதேபோல், மலைக் கோயிலிலும் கட்டண மற்றும் இலவச தரிசன வரிசைகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருந்தனர்.
கார்த்திகைத் திருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கச் சப்பரத்தில் யாகசாலைக்கு சின்னக்குமாரசாமி புறப்பாடு, சண்முகார்ச்சனை மற்றும் தங்கத் தேர் புறப்பாடு நடைபெற்றது. சண்முகார்ச்சனையின் போது, வள்ளி, தெய்வானை சமேத சண்முகர், சின்னக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு, அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
முருகப் பெருமானின் முகத்துக்கு ஒருவராக நான்கு திசைகளிலும் ஆறு அர்ச்சகர்கள் நின்று அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடத்தினர். இதை ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் கண்டு வழிபட்டனர்.