திண்டுக்கல் கூட்டுறவு சங்கங்களில் உரம் விலை உயர்த்தப்படவில்லை: இணைப் பதிவாளர் தகவல்
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களில், விவசாயிகள் நலன் கருதி உரங்களின் விலை
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களில், விவசாயிகள் நலன் கருதி உரங்களின் விலை உயர்த்தப்படாமல் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது என இணைப் பதிவாளர் எஸ்.குமார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உர உற்பத்திக்கு தேவையான மூலப் பொருள்கள் நாப்தா மற்றும் பாஸ்பாரிக் அமிலம் ஆகியவற்றின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக, உரங்களின் விற்பனை விலையை அனைத்து நிறுவனங்களும் கடந்த செப்.1 ஆம் தேதி முதல் உயர்த்தியுள்ளன. ஆனாலும், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களில், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (டான்பெட்) மூலமாக பழைய விலையிலேயே உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வெளிச் சந்தையில் ரூ.1365-க்கு விற்பனை செய்யப்படும் டிஏபி மூட்டை, கூட்டுறவு சங்கத்தில் ரூ.1290-க்கும், ரூ.1015-க்கு விற்பனை செய்யப்படும் 20:20:0:13 காம்பளக்ஸ் உரம் ரூ.950-க்கும், ரூ.1580-க்கு விற்பனை செய்யப்படும் 10:26:26 காம்பளக்ஸ் உரம் ரூ.1160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் பாமணி 17:17:17 உரம் ரூ.970-க்கும், கலப்பு உரம் எண் 2 ரூ.482-க்கும், கலப்பு உரம் எண் 3 ரூ.605-க்கும், கலப்பு உரம் எண் 10 ரூ.469-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாய்ப்பினை திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.