கொடைக்கானலில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து திங்கள்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இங்குள்ள ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், அப்சர்வேட்டரி, டிப்போ, நாயுடுபுரம், அண்ணா சாலை, செவண் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில இடங்களில் மட்டும் தேநீர் கடைகள், சிறு உணவகங்கள் திறந்திருந்தன. வழக்கம் போல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட வில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை. வழக்கம் போல் படகு சவாரி நடைபெற்றது.
கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்: கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்று மூஞ்சிக்கல் பகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.