கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிப் பகுதியில் குடிநீர் குழாய்கள் சேதமடைந்து குடி தண்ணீர் வீணாகச் சாலையில் செல்வதால் பொது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
வில்பட்டி ஊராட்சிப் பகுதிககளில் ஏற்கெனவே 15-நாள்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, புலியூர், கடல்கொடை, பாயாசக்கடை ஸ்டாப் உள்ளிட்ட இடங்களில் குடி தண்ணீர் குழாய்கள் சேதமடைந்துள்ளன. அவற்றில் இருந்து வெளியேறும் தண்ணீரானது சாலையில் பாய்ந்து வீணாகிறது. இதனால் பல்வேறு பகுதிகளுக்கும் குடிநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கிராம மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.
மேலும் வில்பட்டி ஊராட்சிப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்து வருகிறது. மேலும் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் இருப்பதால் கழிவு நீர் சாலைகளில் செல்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு மக்களுக்கு பல்வேறு விதமான தொற்று நோய்கள் பாதிக்கும் அபாயம் இருந்து வருகிறது. எனவே சேதமடைந்துள்ள குடிநீர் குழாய்களை சரி செய்யவும், குப்பைகள் அகற்றவும் வில்பட்டி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வில்பட்டி ஊராட்சி செயலர் சில்வர் கூறியதாவது: வில்பட்டி ஊராட்சி பகுதியில் குடிநீர் குழாய்கள் சேதமடைந்துள்ளது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். சாலைகளிலும் பொது இடங்களிலும் குப்பைத் தொட்டிகளைச் சுற்றியும் கழிவறைகளாக மக்கள் பயன்படுத்தி வருவதால் குப்பைகள் அகற்ற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இருப்பினும் அவற்றை சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.