காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக ஒட்டன்சத்திரம் அருகே 40 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் நீலமலைக்கோட்டை கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில், காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் நினைவாக 40 மரக்கன்றுகள் நட்டு மரியாதை செலுத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டும் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா, விழுதுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குப்புச்சாமி, செயலாளர் காந்தி, ஊராட்சி செயலாளர் பவுல்ராஜ் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி கூறியது: இது ஒரு உயிரோட்டமான ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சியாகும். நாடு முழுவதும் ஒவ்வொருவரும் இதை செயல்படுத்தினால் லட்சக்கணக்கான மரங்கள் நம் வீரர்களின் உயிர்த்தியாகத்தை போற்றும் வகையில் இருக்கும். மேலும் பதாகை வைப்பதும், சுவெராட்டி ஒட்டுவதும் சில நாட்களில் மறைந்து விடும். வீரர்களின் பெயரில் மரக்கன்றுகளை நடுங்கள். இது இயற்கையோடும்,தியாகத்தோடும் வளரும் என்றார்.