பழனி மலைக்கோயிலில்குவிந்த நகரத்தார் காவடிகள்
பழனி மலைக்கோயிலில் புதன்கிழமை காரைக்குடி நகரத்தாரின் 2,800 காவடிகள் ஒரே நேரத்தில் மலையேறியதால் மலைமுழுவதும் காவடிகளால் நிரம்பி காணப்பட்டது.
பழனி மலைக்கோயிலில் புதன்கிழமை காரைக்குடி நகரத்தாரின் 2,800 காவடிகள் ஒரே நேரத்தில் மலையேறியதால் மலைமுழுவதும் காவடிகளால் நிரம்பி காணப்பட்டது.
பழனியில் தைப்பூசத் திருவிழா நடைபெற்று வருகிறது. பழனிக்கு காவடி எடுத்து வரும் பக்தர்கள் கூட்டத்தில் நகரத்தார் காவடி குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் மேற்குப்பகுதியில் இருந்து காவடிகள் வருவதற்கு முதல் காரணமாக இருந்தது நகரத்தார் காவடியாகும். இந்த காவடியுடன் வைரவேல் இரட்டை மாட்டுவண்டியில் கொண்டு வரப்படுகிறது. தைப்பூசத் திருக்கல்யாண நாளன்று பழனி வரும் நகரத்தார் காவடிகள் தைப்பூசம் ஒன்பதாம் நாள் விழாவில் மலைக்கோயிலுக்கு செல்வது வழக்கம். இதன்படி புதன்கிழமை தெற்குரதவீதியில் உள்ள நகரத்தார் மடத்தில் இருந்து சுமார் 2,800 காவடிகள் ஒரே நேரத்தில் கிளம்பி கடைவீதி, சன்னதி வீதி வழியாக மலைக்கோயிலுக்கு படிவழியாக சென்று மலைக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி மடத்துக்கு திரும்பினர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான காவடிகள் கூட்டம் பேருந்து நிலையம் பகுதியில் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வரும் வெள்ளிக்கிழமை நகரத்தார் வைரவேல் ஊர்வலம் நடைபெறவுள்ளது.