பழனி அருகே பாப்பாகுளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்டது பாப்பாகுளம். 175 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த குளத்தின் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் குளத்தில் தண்ணீர் இல்லாத காலங்களில் குளத்தை ஆக்கிரமித்து சிறுசிறு பயிர்களை பயிரிட்டு வந்தனர். இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் கடந்த சில ஆண்டுகளாக குளத்தை ஆக்கிரமிப்பு செய்த சிலர் நிரந்தரமாக தங்களுக்கு சொந்தமாக்கி கொள்ளும் எண்ணத்துடன் கொய்யா போன்ற நீண்டகால செடிகளைப் பயிரிட்டு வளர்த்து வருகின்றனர். இதனால் 175 ஏக்கர் பரப்பளவுள்ள பாப்பாகுளம் தற்போது பாதியாக சுருங்கி குட்டை போலாகிவிட்டது.
அண்மையில் தமிழக அரசு சார்பில் குடிமராமத்து பணி மூலம் பாப்பாகுளத்தை தூர்வாரி சீரமைக்க ரூ. 47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை அடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி பாப்பாகுளத்தை பார்வையிட்டார். அப்போது குளத்தில் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குளத்தில் தற்போது 600 அடி ஆழத்திற்கு ஆழ் குழாய் கிணறு அமைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியது: ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளில் செடிகள் நடப்பட்டு தற்போது மரங்களாகவே வளர்ந்துள்ளது. இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. எனவே உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தின் எல்லையை வரையறை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.