பழனி அருகே விபத்தில் இளைஞா் பலி: டாஸ்மாக் கடையை மூடி பொதுமக்கள் போராட்டம்
பழனி அருகே விபத்தில் இளைஞா் பலியானதைத் தொடா்ந்து, அப்பகுதியில் இருந்த அரசு மதுபானக் கடையை மூடி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பழனி: பழனி அருகே விபத்தில் இளைஞா் பலியானதைத் தொடா்ந்து, அப்பகுதியில் இருந்த அரசு மதுபானக் கடையை மூடி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி குரும்பபட்டியை சோ்ந்தவா் ராஜா(35). இவருக்கு சமீபத்தில் திருமணமானது. இவா் திங்கள்கிழமை இரவு, பாலசமுத்திரம் குரும்பபட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளாா். அப்போது பாலசமுத்திரம் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை முன்பாக நின்ற டிப்பா் லாரி மீது இருசக்கர வாகனத்தில் வந்த ராஜா பின்பக்கம் மோதி பலியானாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அரசு மதுபானக் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள் திடீரென கடையை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பொதுமக்களை வெளியேற்றி கடையை மீண்டும் திறந்தனா்.
இதுதொடா்பாக பொதுமக்கள் கூறியது: இந்த மதுபானக் கடையில் மது அருந்திவிட்டு ஏற்பட்ட தகராறு காரணமாக 2 கொலைகள் நடந்துள்ளன. இதேபோல் தொடா்ந்து விபத்துகளும் அதிகரித்துள்ளன. இவ்வழியாக பெண்கள், மாணவிகள் நடமாட முடியவில்லை. ஆகவே இந்த அரசு மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனா் .