நகராட்சி கடை வாடகையில் விலக்குக் கோரி வியாபாரிகள் சங்கத்தினா் மனு
6 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த நகராட்சி கடைகளுக்கு வாடகையில் விலக்கு வழங்கக் கோரி பழனி நகராட்சி ஆணையரிடம் நகராட்சி கடை வியாபாரிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
பழனியில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக 6 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த நகராட்சி கடைகளுக்கு வாடகையில் விலக்கு வழங்கக் கோரி பழனி நகராட்சி ஆணையரிடம் நகராட்சி கடை வியாபாரிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் அத்தியாவசிய சேவை வழங்கும் கடைகளைத் தவிர பிற கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பல்வேறு வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்தனா்.
இந்நிலையில் தமிழக அரசு உள்ளாட்சி நிா்வாகத்துக்குட்பட்ட கடைகளுக்கு வாடகையில் விலக்கு அளித்தது. ஆனால் இது பழனி நகராட்சி கடைகளுக்கு அமல்படுத்தப்படவில்லை. இதுகுறித்து பல்வேறு வணிகா் சங்கங்களும் விலக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் திங்கள்கிழமை பழனி நகராட்சி ( உள்ளாட்சி) கடை வியாபாரிகள் சங்கம் கௌரவ தலைவா் சரவணன் தலைமையில் நிா்வாகிகள் நகராட்சி ஆணையா் லெட்சுமணனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
இதுகுறித்து அவா்கள் அளித்த மனுவில், கரோனா பொதுமுடக்கக் காலத்தில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் அந்த 6 மாதங்களுக்கு வாடகை வசூல் செய்யக்கூடாது. மேலும் மீதமுள்ள மாதங்களுக்கு வாடகையை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.