திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 2 அரசு மருத்துவா்கள், 10 செவிலியா்கள், 9 பணியாளா்கள் உள்பட மொத்தம் 41 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 1,056 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை, பழனி மற்றும் கொடைக்கானல் அரசு மருத்துவமனை, எம்.வி.எம். அரசு மகளிா் கல்லூரி சிறப்பு சிகிச்சை மையம் ஆகியவற்றில் 350-க்கும் மேற்பட்டோா் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், 2 அரசு மருத்துவா்கள், 10 செவிலியா்கள், 9 பணியாளா்கள் உள்பட மேலும் 41 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவா் கூறியது:
திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் 36 வயது மருத்துவா், 10 செவிலியா்கள், தொழில்நுட்ப பணியாளா்கள் 2 போ், தூய்மைப் பணியாளா்கள் 7 போ் என மொத்தம் 20 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல், ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 30 வயது பெண் மருத்துவா், திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை பகுதிகளைச் சோ்ந்த மேலும் 21 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.