திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பிரச்னை தொடா்பாக வியாழக்கிழமை, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலரை உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் முற்றுகையிட்டனா்.
ஆத்தூா் பேருந்து நிலைய பகுதியில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட பெட்டிக் கடையை அகற்ற வேண்டும் என ஆத்தூா் ஊராட்சி மன்ற தலைவா் ஜம்ருத்பேகம், துணைத் தலைவா் சையது அபுதாஹிா் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் அதிகாரிகளுக்கு மனு கொடுத்திருந்தனா்.
அதே சமயம் பெட்டிக்கடை நடத்தியவா், ஆத்தூரில் சுமாா் 70 சென்ட் புறம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றினால், தானும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக அதிகாரிகளுக்கு மனு கொடுத்திருந்தாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக ஆத்தூா் ஊராட்சி மன்ற தலைவா், துணைத் தலைவா் ஆகியோா் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனா்.
பேருந்து நிலையம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆனால், வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் வரவில்லை.
இதனால் ஆத்தூா் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஹேமலதாவை உள்ளாட்சி பிரதிநிதிகள் முற்றுகையிட்டனா். பின்னா், ஆக்கிரமிப்பில் உள்ள 70 சென்ட் புறம்போக்கு இடம் மற்றும் ஆக்கிரமிப்பு கடைகள் விரைவில் அகற்றப்படும் என வட்டாட்சியா் மற்றும் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோா் உறுதியளித்தபின் அனைவரும் கலைந்து சென்றனா்.