திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 400 அரசுப் பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மற்றும் தேனி கோட்டங்களில், நகரப் பேருந்து,
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மற்றும் தேனி கோட்டங்களில், நகரப் பேருந்து, தொலைதூரப் பேருந்து மற்றும் மலைப் பேருந்து என 400 அரசுப் பேருந்துகள்(மொத்த அளவில் 50 சதவீதம்) மீண்டும் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மண்டலத்தின் சார்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் 1, 2, 3, நத்தம், வேடசந்தூர், வத்தலகுண்டு, பழனி, ஒட்டன்சத்திரம் என 8 கிளைகள் உள்ளன. அதேபோல் தேனி மாவட்டத்தில் பெரியகுளம், தேனி, போடி, தேவாரம், கம்பம் 1, கம்பம் 2, குமுளி என 7 கிளைகள் உள்ளன.
இதில் திண்டுக்கல் கோட்டத்திலுள்ள 8 கிளைகள் சார்பில் 205 நகரப் பேருந்துகள், 187 தொலைதூரப் பேருந்துகள், 39 மலைப் பேருந்துகள் என 431 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. அதேபோல் தேனி கோட்டத்திலுள்ள 7 கிளைகள் சார்பில் 104 நகரப் பேருந்துகள், 218 தொலைதூரப் பேருந்துகள், 25 மலைப் பேருந்துகள் என 367 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. கரோனா தீநுண்மி காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால், கடந்த 70 நாள்களாக பேருந்து சேவை துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜூன் 1ஆம் தேதி முதல் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததை தொடர்ந்து, திண்டுக்கல் மண்டலத்தில் 400 பேருந்துகளை இயக்குவதற்கு அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதன்படி திண்டுக்கல் கோட்டத்தில் 104 நகரப் பேருந்துகள், 93 தொலைதூரப் பேருந்துகள், 20 மலைப் பேருந்துகள் என 215 பேருந்துகள் திங்கள்கிழமை முதல் இயக்கப்பட உள்ளன.
அதேபோல் தேனி கோட்டத்தில் 52 நகரப் பேருந்துகள், 119 தொலைதூரப் பேருந்துகள், 12 மலைப் பேருந்துகள் என 183 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை தேனி சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஊரகப் பகுதிகளுக்கும் மீண்டும் பேருந்து சேவை தொடங்கியது. பயணிகள் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.