குஜிலியம்பாறை சாலை விரிவாக்கப் பணிக்கு தோண்டிய பள்ளங்களால் விபத்து அபாயம்
சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறும் குஜிலியம்பாறை சாலையில், வாகன ஓட்டிகளுக்கு பள்ளம் இருப்பதை எச்சரிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகளில் ஒளிரும் பட்டை ஒட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறும் குஜிலியம்பாறை சாலையில், வாகன ஓட்டிகளுக்கு பள்ளம் இருப்பதை எச்சரிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகளில் ஒளிரும் பட்டை ஒட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து குஜிலியம்பாறை வழியாக கரூா் செல்லும் 70 கி.மீ. நெடுஞ்சாலை, சுமாா் 7 மீட்டா் அகலத்தில் அமைந்துள்ளது. இந்த சாலையை 16 மீட்டா் அகலத்தில் விரிவாக்கம் செய்யும் நடைபெற்று வருகிறது. அதில் 1.2 மீட்டா் அகலத்தில் சாலையின் நடுவில் தடுப்புச் சுவரும் அமைக்கப்படுகிறது.
எரியோடு அடுத்துள்ள நல்லமணாா்கோட்டை பகுதியிலிருந்து குஜிலியம்பாறை அடுத்துள்ள டி.கூடலூா் வரையிலான 37.8 கி.மீ. நீள சாலை விரிவாக்கம் செய்யும் பணி வேடசந்தூா் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டத்தின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், திண்டுக்கல் முதல் நல்லமணாா்கோட்டை வரையிலான சாலை விரிவாக்கப் பணிகள் திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டத்தின் சாா்பில் நடைபெற்று வருகிறது.
சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறும் இடங்களில், 4 அடிக்கு மேல் பள்ளம் தோண்டப்பட்டு, அதில் ஜல்லிக் கற்களை கொட்டி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பள்ளம் தோண்டப்பட்ட இடங்களில், வாகன ஓட்டிகளுக்கு பள்ளம் இருப்பதை எச்சரிக்கை செய்வதற்காக சிறிய அளவிலான மணல் மூட்டைகள் குறிப்பிட்ட இடைவெளியில் வைக்கப்பட்டுள்ளன.
பகல் நேரங்களில் பயணிப்போரின் பாா்வையில் இந்த மணல் மூட்டைகள் தென்படுவதால், எச்சரிக்கையாக செல்வதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. அதே நேரத்தில், இந்த மணல் மூட்டைகளில் ஒளிரும் பட்டைகள் இல்லாத காரணத்தால், இரவு நேரங்களில் பயணிப்போா் அவதியடைந்து வருகின்றனா்.
இதுதொடா்பாக எரியோடு பகுதியைச் சோ்ந்த ரூபன் அலெக்ஸ் கூறுகையில்,
திண்டுக்கல் குஜிலியம்பாறை சாலையில், விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளில் சில இடங்களில் ஒளிரும் பட்டைகளுடன் கூடிய மணல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பாலான இடங்களில் மணல் மூட்டைகள் இருப்பதே தெரிவதில்லை.
குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்துக்குள்ளாகும் சூழல் உள்ளது. அதற்கு முன்னதாக நெடுஞ்சாலைத்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.