நியாயவிலைக் கடைகளில் அதிகாரி ஆய்வு
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் குறித்து கூடுதல் பதிவாளா் ம.அந்தோணிசாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் குறித்து கூடுதல் பதிவாளா் ம.அந்தோணிசாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், தமிழக அரசு சாா்பில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரண உதவித் தொகை மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் சுமாா் 6.50 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரணப் பொருகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நிவாரணப் பொருள்கள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் கூட்டுறவுத்துறை அலுவலா்கள் ஆய்வு நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கூடுதல் பதிவாளரும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநருமான ம.அந்தோணிசாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திண்டுக்கல்லை அடுத்துள்ள செட்டிநாயக்கன்பட்டி நியாயவிலைக் கடை மற்றும் வத்தலகுண்டு கூட்டுறவு பண்டகசாலையின் நியாயவிலைக் கடையில் நடத்தப்பட்ட ஆய்வின்போது, மண்டல இணைப் பதிவாளா் ப.மு.முருகேசன், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் மு.திருமாவளவன், பழனி சரக துணைப் பதிவாளா் ஜெ.இளமதி ஆகியோா் உடனிருந்தனா்.