ராமங்களுக்கு நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும்: அமைச்சா்
அதிமுக ஆட்சியின்போது கிராமங்களுக்கு நிறுத்தப்பட்ட அனைத்துப் பேருந்துகளும் 2 மாதத்துக்குள் மீண்டும் இயக்கப்படும் என, கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளாா்.
அதிமுக ஆட்சியின்போது கிராமங்களுக்கு நிறுத்தப்பட்ட அனைத்துப் பேருந்துகளும் 2 மாதத்துக்குள் மீண்டும் இயக்கப்படும் என, கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட். திண்டுக்கல் மண்டலத்தின் சாா்பில், புதிய வழித்தட பேருந்து சேவை, வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவை தொடக்க நிகழ்ச்சி, ரெட்டியாா்சத்திரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மதுரை கோட்ட மேலாண்மை இயக்குநா் பி. திருவாம்பலம்பிள்ளை முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ. பெரியசாமி பேருந்து சேவைகளை தொடக்கி வைத்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. அதன்பின்னா், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், 25 கிராமப்புறங்களுக்கு 16 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த பேருந்துகள், கட்டண வசூல் குறைவாக உள்ளதாகக் கூறி நிறுத்தப்பட்டன. இதனால், பேருந்து வசதி இல்லாமல் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வந்தனா்.
தோ்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆத்தூா் தொகுதிக்குள்பட்ட 25 கிராமங்களுக்கு 16 வழித்தடங்களில் நகரப் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகின்றன. இதேபோல், மாவட்டம் முழுவதும் நிறுத்தப்பட்ட நகரப் பேருந்துகளின் சேவை 2 மாதங்களில் மீண்டும் தொடங்கப்படும்.
அதேபோல், திண்டுக்கல்லில் இருந்து மதுரை, திருச்சி, காரைக்குடி, பழனி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லக்கூடிய தனியாா் பேருந்துகள், தங்களுக்கு உரிய வழித்தடங்களில் இயக்காமல் மாற்றுப்பாதையில் இயக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணையில் அது உறுதி செய்யப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.