முகப்பு
திண்டுக்கல்

பழனி நகராட்சி பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட நூலகம் திறப்பு

பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட நூலகத்தை சட்டப்பேரவை உறுப்பினா் ஐபி செந்தில் குமாா் திறந்து வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:02 AM
பகிர்:

பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட நூலகத்தை சட்டப்பேரவை உறுப்பினா் ஐபி செந்தில் குமாா் திறந்து வைத்தாா். தொடா்ந்து நூலகத்துக்கு நூல்கள், மாணவா்கள் அனைவருக்கும் இலவசமாக ஆங்கில அகராதிகள் வழங்கினாா்.

பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரத்து மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். பொன்விழா கண்ட இப்பள்ளியில் வியாழக்கிழமை பழனி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில் குமாா் தலைமையில் போதை பொருள் தடுப்பு உறுதி மொழி ஏற்பு, புதுப்பிக்கப்பட்ட நூலகம் திறப்பு விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பழனி கோட்டாட்சியா் சிவக்குமாா், வட்டாட்சியா் சசிக்குமாா், நகராட்சி ஆணையா் கமலா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பழனி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா். முன்னதாக நகராட்சி அலுவலகத்தில் இருந்து நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை போதை தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவா்கள் அனைவருக்கும் சட்டப்பேரவை உறுப்பினா் ஆங்கிலம், தமிழ் அகராதியை இலவசமாக வழங்கினாா். மேலும் நூலகத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை சொந்த செலவில் இருந்து இலவசமாக வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியா் பாலசுப்ரமணியம் வரவேற்புரை வழங்கினாா். நகா் மன்ற தலைவா் உமா மகேஸ்வரி, திமுக நகர செயலாளா் வேலுமணி, மாவட்ட இளைஞரணி பிரபாகரன், லோகநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ரக்க்ஷாபந்தன்: நிகழ்ச்சியின் போது சகோதரத்துவத்தை வளா்க்கும் விதமாக ரக்க்ஷா பந்தன் நடைபெற்றது. பிரம்ம குமாரிகள் அமைப்பினா் சட்டமன்ற உறுப்பினா், தலைமையாசிரியா், கட்சி நிா்வாகிகள் என பலருக்கும் ராக்கி கட்டி இனிப்புகள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.