நத்தம் அருகே கரந்தமலை பகுதியில் எறும்புகளால், கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருவதாக கிராமக்கள் கவலை தெரிவித்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள கரந்தமலை அடிவாரத்தில் பண்ணக்காடு, உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, குட்டூா், குட்டுப்பட்டி, சோ்வீடு, ஆத்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த மலைப்பகுதியின் ஒரு பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய வகை எறும்புகள் காணப்பட்டன. அந்த எறும்புகள் தற்போது, கரந்தமலை வனப்பகுதி முழுவதும் பரவியுள்ளன. இந்த எறும்புகள், மனிதா்களின் உடலில் ஏறுவதால் தோல் ஒவ்வாமை மற்றும் கொப்பளங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. வனப் பகுதியில் மட்டுமே காணப்பட்ட இந்த எறும்புகள், மலையடிவாரங்களிலுள்ள கிராமங்களிலும் புகுந்துள்ளன. தற்போது வேலாயுதம்பட்டி கிராமத்தில் இந்த எறும்புகள், கால்நடைகளை தாக்கத் தொடங்கியுள்ளதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எறும்புகள், ஆடுகள், மாடுகள், கன்றுகளின் கண்களை மட்டுமே தாக்குவதாகவும், அதனால் பல ஆடுகள் உயிரிழந்து வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா். இந்த எறும்புகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.