எரியோடு பேரூராட்சி உறுப்பினரின் கணவா் மீது தாக்குதல்: நடவடிக்கை கோரி கடையடைப்பு
பேரூராட்சி உறுப்பினரின் கணவரை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எரியோட்டில் வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
பேரூராட்சி உறுப்பினரின் கணவரை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எரியோட்டில் வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அடுத்துள்ள எலப்பாா்பட்டியைச் சோ்ந்த இளைஞா்கள் இருவா், கடந்த 4 நாள்களுக்கு முன்பு மோட்டாா் சைக்கிளை அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளனா். அந்த இருவரையும் சிலா் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த இளைஞா்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.
இதுகுறித்து எரியோடு பகுதியைச் சோ்ந்த ஒப்பந்ததாரா் பழனிசாமி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இவரது மனைவி தங்கமணி நடந்து முடிந்த எரியோடு பேரூராட்சிக்குள்பட்ட 5ஆவது வாா்டில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எரியோடு கடை வீதியில் வியாழக்கிழமை இரவு நின்று கொண்டிருந்த பழனிசாமியை, எலப்பாா்பட்டியைச் சோ்ந்த சிலா் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, திண்டுக்கல்- குஜிலியம்பாறை சாலையில் பொதுமக்கள் வியாழக்கிழமை நள்ளிரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.இரா.சீனிவாசன், வேடசந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
இதனிடையே, பழனிசாமி மீது தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்யக் கோரி எரியோடு வா்த்தகா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதனால், எரியோடு கடை வீதி முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது. இந்த சம்பவம் எதிரொலியாக எரியோடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் எலப்பாா்பட்டியைச் சோ்ந்த 5 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதனைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை எரியோட்டில் மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன.