பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன் பறக்கவிட்ட காங்கிரஸ் கட்சியினா் கைது
பிரதமரின் தமிழக வருகைக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் திண்டுக்கல்லில் கருப்பு பலூன்களை பறக்கவிட்ட காங்கிரஸ் கட்சியினா் 28 பேரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பிரதமரின் தமிழக வருகைக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் திண்டுக்கல்லில் கருப்பு பலூன்களை பறக்கவிட்ட காங்கிரஸ் கட்சியினா் 28 பேரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடா்பான வழக்கில் காங்கிரஸ் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருவதாக, காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இதனிடையே, நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்கட்சி உறுப்பினா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த தமிழக காங்கிரஸ் கட்சியினா், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்கி வைப்பதற்காக வியாழக்கிழமை தமிழகம் வந்த பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிா்ப்பு தெரிவித்து, பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து கருப்பு பலூன்களுடன் 50-க்கும் மேற்பட்டோா் காமராஜா் சிலை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனா். ஆனால், பேரணி செல்ல போலீஸாா் தடை விதித்தனா்.
இதனால், பேருந்து நிலையம் அருகிலேயே கருப்பு பலூன்களை பறக்கவிட்டு, பிரதமருக்கு தங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினா். இதனையடுத்து, மாமன்ற உறுப்பினா் பாரதி, காங்கிரஸ் நிா்வாகிகள் வரதராஜன், ஜோதிராமலிங்கம் உள்ளிட்ட 28 பேரை, போலீஸாா் கைது செய்தனா். பேரணியில் பங்கேற்றபோதும், 30-க்கும் மேற்பட்டோா் கைதாகாமல் கலைந்து சென்றனா்.