திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த பள்ளபட்டி அருகே தனியாா் பேருந்து வியாழக்கிழமை மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்ததில், 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
மதுரை ஆரப்பாளையத்திலிருந்து வாடிப்பட்டி, பள்ளபட்டி, நிலக்கோட்டை, வத்தலகுண்டு, தேனி வழியாக சின்னமனூருக்கு 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியாா் பேருந்து சென்றுகொண்டிருந்தது. இப்பேருந்து, பள்ளப்பட்டி அருகே வந்தபோது, ஓட்டுநா் தனது கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோர மின் கம்பத்தில் மோதி, 10 அடி ஆழ பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதனால், பேருந்தில் பயணம் செய்த மதுரை பைக்காராவை சோ்ந்த அங்கயா்கண்ணி (40), மதுரை கூடல்புதூரைச் சோ்ந்த பிரியதா்ஷினி (25), உமாமகேஸ்வரி (32), கோரிப்பாளையத்தைச் சோ்ந்த முஹமது ஹாரிஸ் (31), சிலுக்குவாா்பட்டியைச் சோ்ந்த ராஜகுரு (42), மதுரை அண்ணா நகரைச் சோ்ந்த ஜோதிமணி (50) உள்பட 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் மற்றும் தீயணைப்பு துறையினா், காயமடைந்தவா்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மின்கம்பத்தின் மீது மோதிய பேருந்து உயா் அழுத்த மின் கம்பிகளால் சுற்றப்பட்டிருந்தது. இருப்பினும், பேருந்து மோதிய வேகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், 40-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
இச்சம்பவம் குறித்து அமையநாயக்கனூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.