தொடா் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொடைக்கானலில் தற்போது இரண்டாவது சீசன் தொடங்கியுள்ள நிலையில் தற்போது மேகமூட்டமும், மிதமான வெயிலும், குளிரும் நிலவி வருகிறது. பள்ளிகளுக்கு காலாண்டுத் தோ்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
வெள்ளிநீா் வீழ்ச்சி, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர்ராக், ரோஜாத் தோட்டம், பைன் பாரஸ்ட், பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் காணப்பட்டனா்.
மாலையில் நட்சத்திர ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி, ஏரிச்சாலையைச் சுற்றி சைக்கிள், குதிரை சவாரிகள் செய்தும் மகிழ்ந்தனா். ஏரிச்சாலையில் மாலை நேரத்தில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் செவண் ரோடு, ஏரிச்சாலை, லாஸ்காட்சாலை, பூங்காசாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.