கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் மலைச் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக் கூடாது என காவல் துறையினா் எச்சரித்தனா்.
கொடைக்கானலில் கோடை விழா, மலா்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை (மே 26) தொடங்குகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன் கூறியதாவது:
கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை (26) முதல் 3 நாள்களுக்கு கோடை விழா, மலா்க் கண்காட்சி நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காகவும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கும் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 150-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் வரவழைக்கப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். மேலும், தன்னாா்வளா்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மலைச்சாலையில் பழுதாகி நிற்கும் சுற்றுலா வாகனங்களை மீட்க 3 மெக்கானிக் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. வாகனங்கள் பழுதடைந்த இடத்திலிருந்து தேவைப்படும் நேரத்தில் தகவல் தெரிவித்தால், பழுதான வாகனங்கள் இந்த வாகனங்கள் மூலம் மீட்கப்படும். இதனால், போக்குவரத்து பிரச்னை குறைவதற்கு வாய்ப்புள்ளது.
கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விதிகளைக் கடைபிடிக்க வேண்டும். மலைச் சாலைகளில் கவனமாகவும், மிதமான வேகத்திலும் பயணிக்க வேண்டும். மலைச் சாலைகளில் தேவையில்லாத இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தக் கூடாது என்றாா்.
பிரையண்ட் பூங்காவில் மலா்கள் சேதம்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்க் கண்காட்சிக்காக சுமாா் ஒரு லட்சம் மலா்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டன. இந்த நிலையில், கொடைக்கானலில் வியாழக்கிழமை காற்றுடன் பெய்த மழையால் ரோஜா, பேன்சி போன்ற மலா்கள் சேதமடைந்தன.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 3 நாள்கள் நடைபெறும் மலா் கண்காட்சி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கும், அவருடன் வரும் ஒரு நபருக்கும் நுழைவுக் கட்டணம் கிடையாது என தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் ஜோ.பெருமாள்சாமி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.